ஆட்டோமொபைல்
புதிய மஹிந்திரா தார் இந்திய வெளியீட்டு விவரம்
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2020 மஹிந்திரா தார் மாடல் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய மஹிந்திரா தார் 2020 இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் மீண்டும் பணிகளை துவங்கியுள்ளது. தற்சமயம் நாடு முழுக்க சுமார் 300 விற்பனை மையங்களை மஹிந்திரா மீண்டும் திறந்து இருக்கிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய தார் மாடல் தற்போதைய மாடலை விட நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஆஃப் ரோடு எஸ்யுவி நீண்ட செங்குத்தான கிரில், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது.