செய்திகள்
கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - கலெக்டரிடம் கட்டுமான தொழிலாளர்கள் மனு
கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தினர், கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இணையவழி பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனு சமர்ப்பித்தலை எளிமையாக்கிட வேண்டும். புதுப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் விடுபட்டு போன கொரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால தீர்ப்பின்படி இணையவழி செயல்பாடுகள் சீரான நடைமுறைக்கு வரும் வரை, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். பதிவு செய்யும் போது, அனைத்து ஆவணங்களும் தரப்பட்டுள்ளதால் பதிவை புதுப்பிக்கும் போது மீண்டும் அந்த ஆவணங்கள் கேட்பதை கைவிட வேண்டும். எப்போதும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சர்வர், முழு அளவில் வேலை செய்திட ஏற்பாடு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள், குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) உள்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். அனைத்து அஞ்சலகம், கிராம மக்கள் சேவை மையம் போன்ற அனைத்திலும் ஆதார் எண்ணுடன் புதிய தொலைபேசி எண்ணை இணைத்திட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.