வழிபாடு
திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20-ந்தேதி வெளியீடு

Published On 2022-03-18 02:38 GMT   |   Update On 2022-03-18 02:38 GMT
பக்தர்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை நேரடியாக முன்பதிவு செய்யலாம்.
திருமலை

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் உள்ளது. அந்தச் சேவைகளை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதியில் இருந்து தொடர திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை மற்றும் நிஜபாத தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய, பக்தர்கள் 20-ந்தேதி காலை 10 மணியில் இருந்து 22-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் எலக்ட்ரானிக் டிப் (குலுக்கல்) முறை மூலம் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். 22-ந்தேதி காலை 10 மணிக்கு பிறகு டிக்கெட்டுகள் பெறுவோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். இதேபோல் பக்தர்களுக்கு செய்தி மற்றும் எஸ்.எம்.எஸ், இ- மெயில்மூலம் தெரிவிக்கப்படும். டிக்கெட்டுகள் பெறும் பக்தர்கள் டிக்கெட்டுகளின் கட்டணத்தை 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

மறுபுறம் பக்தர்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை நேரடியாக முன்பதிவு செய்யலாம்.

முக்கிய நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது, ஏப்ரல் மாதம் 2-ந்தேதி யுகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) பண்டிகை அன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் 10-ந்தேதி ஸ்ரீராம நவமி அன்று தோமாலை சேவை, அர்ச்சனை, வசந்த உற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதம் 14-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை வசந்த உற்சவம் காரணமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஏப்ரல் மாதம் 15-ந்தேதி நிஜபாத தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் திருமலையில் நடக்கும் பத்மாவதி பரிநய உற்சவத்தையொட்டி மே மாதம் 10-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் மாதம் 14-ந்தேதி ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வது நாள் அன்று அஷ்டதள பாதபத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆர்ஜித சேவை டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற (நெகட்டிவ்) சான்றிதழ் கொண்டு வர வேண்டும் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

பக்தர்கள் தங்களின் உடல் நல ஆரோக்கியம், திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News