செய்திகள்
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
வில்லியனூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லியனூர்:
திருவண்டார்கோவில் புதுநகரை சேர்ந்தவர் பாலு என்கிற வெங்கடேசன். உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கும் புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை நகரை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகள் ஜெயஸ்ரீக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணமானது. அடுத்து சில மாதங்களில் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணையாக 50 பவுன் நகை கேட்டு ஜெயஸ்ரீயை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து வில்லியனூர் மகளிர் போலீசில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இருவரின் குடும்பத்தாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் கார் மற்றும் 50 பவுன் நகையை பெற்றோரிடம் வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டு ஜெயஸ்ரீயை மீண்டும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வில்லியனூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.