கோவையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் சிறையில் அடைப்பு
கோவை:
தமிழகத்தில் புகையிலை மற்றும் குட்கா ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் ரத்தினபுரி போலீசார் காந்திபுரம் ராதாகிருஷ்ணன் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற 3 வாலிபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாலிபர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
3 பேரிம் இருந்து போலீசார் 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.20,500 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈச்சனாரியை சேர்ந்த அய்யன்ன கான் (வயது 32), டவுன்ஹாலை சேர்ந்த ரணசிங் (36), உமத்சிங் (26) என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் என்.ஜி.ஆர். வீதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போத்தனூர் போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் அங்கு விற்பனைக்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 100 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராஜ்குமார் (31) என்பரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.