மக்கள் பாதுகாப்பாக பயணிக்க ஓட்டை, உடைசலான பஸ்களை மாற்ற வேண்டும்- விஜயகாந்த் கோரிக்கை
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசு பேருந்துகள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் காலாவதியான அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே, தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி, மக்கள் பாதுகாப்பாக பயணிக்க, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், ஐந்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகளை போக்குவரத்துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.
அதில் தரமில்லாத பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.