செய்திகள்

வெற்றி - தோல்வி இயல்பானது - தேர்தல் முடிவு குறித்து டி.டி.வி.தினகரன் கருத்து

Published On 2019-05-24 00:17 GMT   |   Update On 2019-05-24 00:17 GMT
தேர்தல் அரசியலில் வெற்றி-தோல்வி என்பது இயல்பானது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ‘டுவிட்டரில்’ பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை:

பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ‘டுவிட்டரில்’ பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி-தோல்வி என்பது இயல்பானது.

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும், நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ‘பீனிக்ஸ்’ பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அ.ம.மு.க.வின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News