செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
ஜோலார்பேட்டை அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை:
சென்னை திரிசூலம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சூர்யா (வயது 21). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று புதுப்பேட்டை அருகே உள்ள கோனாபட்டு பகுதியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வந்துள்ளார்.
உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்டார். தாமலேரிமுத்தூர் ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.