செய்திகள்
கொலை

திருச்சி அருகே நள்ளிரவில் பிரபல ரவுடி அடித்துக்கொலை

Published On 2021-03-27 06:01 GMT   |   Update On 2021-03-27 06:01 GMT
திருச்சி அருகே நள்ளிரவில் பிரபல ரவுடி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் நெம்பர் 1. டோல்கேட், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சியடைந்து, நெம்பர் 1. டோல் கேட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் கொலையுண்ட வாலிபர் உடல் அருகே கட்டைகள் ரத்தக்கறையுடன் கிடந்தன. இதனால் வாலிபரின் தலையில் கட்டையால் அடித்து சிதைத்து கொலை செய்திருப்பதை முதல்கட்ட விசாரணையில் போலீசார் உறுதி செய்தனர்.

பிறகு போலீசார் இறந்து கிடந்த வாலிபர் யார்? என்று தொடர்ந்து விசாரித்தனர். விசாரணையில் முசிறி பரிசல்துறை ரோடு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் மகன் பிரவின்குமார் (வயது 32). இவர் லால்குடி பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் தனது மனைவியிடம், நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறேன் என்று கூறி, வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். பின்னர் அவர் நெம்பர் ஒன் டோல்கேட் பகுதி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரவீன்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளது. பின்னர் ஆத்திரத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து பிரவின்குமாரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தலையை சிதைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட பிரவின்குமார் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொலை மிரட்டல் போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

இதனால் ரவுடி பிரவின் குமாரை முன்விரோதம் காரணமாக கொலை செய்திருப்பார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News