உள்ளூர் செய்திகள்
புளியரையில் கனிமவள கடத்தலை தடுக்ககோரி ஆலோசனை கூட்டம்
கனிமவள கடத்தலை தடுக்ககோரி புளியரை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செங்கோட்டை:
அண்டை மாநிலமான கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்லும் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் புளியரையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் ஜமீன் முன்னிலை வகித்தார்.
அவருடன் கீழப்பாவூர் ஒன்றிய குழு உறுப்பினர் ராமஉதயசூரியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவில் கனிமவளங்கள் கடத்தப்படுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்படைந்து இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன.
இது தொடர்பாக கடந்த மாதம் பாவூர்சத்திரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் கனிமவளங்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே வருகிற 16-ந்தேதி காலை 10 மணியளவில் மக்களை ஒன்று திரட்டி புளியரை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் புளியரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.