உள்ளூர் செய்திகள்
தூக்கில் ஆண் பிணம்

முந்திரி தோப்பில் தூக்கில் ஆண் பிணம்

Published On 2022-01-11 09:54 GMT   |   Update On 2022-01-11 09:54 GMT
அரியலூர் அருகே முந்திரி தோப்பில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் ஒரு தனியார் முந்திரி தோப்பு உள்ளது.

இப்பகுதியை சுற்றியிருப்பவர்கள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளை இங்கு மேய்ச்சலுக்க விடுவது வழக்கம்.

இதே போல், இன்று காலை, தங்கள் கால்நடைகளை முந்திரி தோப்பில் மேய்ச்சலுக்கு விடும்போது, தோப்பிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது ஆடு மேய்க்க சென்றவர்கள் ஏதேனும் இறந்து கிடக்கும் என இருந்துள்ளனர்.

துர்நாற்றம் அதிகரித்ததால், நாற்றம் அடித்த இடத்தை நோக்கிச் சென்று அவர்கள் பார்த்தனர். அப்போது, அங்கு முந்திரி மரத்தில் ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள், உடனடியாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், மரத்தில் தூக்கில் தொங்கியவர் உடலை கீழே இறக்கினர்.

பிணமாக இருந்தவருக்கு சுமார் 40 வயதுக்கு மேல் இருக்கும் என்றும், அவர் அணிந்திருந்த வேஷ்டியை மரத்தில் சுருக்குப் போட்டு தொங்கிய நிலையிலும், முகக்கவசம் அணிந்த நிலையிலும் இருந்துள்ளார். பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தூக்கில் பிணமாக கிடந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருப்பார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அடையாளம் தெரியாத ஆண் பிணம் முந்திரிக்காட்டில் தொங்கியவாறு இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News