செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 11-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்
மாவட்டத்தின் 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 41 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 226 பேருக்கு முதல் தவணையும், 7 லட்சத்து 79 ஆயிரத்து 542 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
2 லட்சத்து 84 ஆயிரத்து 74 பேருக்கு முதல் தவணையும், 3 லட்சத்து 93 ஆயிரத்து 395 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இந்தநிலையில் 11-வது கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் தடுப்பூசி கிடைப்பதற்காக முகாம் அமைத்து விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
41 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டு இருந்தது. இரவு 7 மணி வரை முகாம் நடக்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,580 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியின் 17 நகர் நல மையங்களுக்கு உட்பட்ட 138 இடங்களில் முகாம் நடைபெற்றது. இன்று நடைபெறும் முகாமில் 1லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.