தொழில்நுட்பம்
தவறு இழைத்துவிட்டோம், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் - ட்விட்டர் அறிவிப்பு
ட்விட்டர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் தவறு இழைத்துவிட்டதாகவும், இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் தனது பயனர் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. ட்விட்டர் வலைத்தள செட்டிங் காரணமாக இந்த பிழை ஏற்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தளத்தில் இருந்த பிழைகள் சமீபத்தில் கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் யார் யார் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை. பயனர் விவரங்களை பாதுகாக்கும் விவகாரத்தில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.
ட்விட்டர் பயன்படுத்திய விவரங்களில் பயனரின் தேசிய குறியீடு, அவர்களது பயன்பாட்டு விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களின் விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
"நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள், நாங்கள் இங்கு தோற்றுவிட்டோம்," என ட்விட்டர் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறது. மேலும் இது போன்ற தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் பயனர் விவரங்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டோ அல்லது பயனர்களிடம் இருந்து அனுமதியின்றி சேகரித்த விவரங்களுக்கு ஏற்ப பயனர்களுக்கு விளம்பரங்களை தளத்தில் பதிவிட்டிருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.