செய்திகள்
நாயை மாரிமுத்து அடித்து துன்புறுத்தும் காட்சி.

கோவையில் வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்திய தொழிலாளி கைது

Published On 2021-10-09 06:49 GMT   |   Update On 2021-10-09 06:49 GMT
கோவையில் வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 42). கூலித்தொழிலாளி.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை, கட்டிவைத்து அடித்து துன்புறுத்தினார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் மாரிமுத்து நாயை துன்புறுத்தும் காட்சியை செல்போனில் பதிவு செய்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த கோவையைச் சேர்ந்த பிராணிகள் நல சங்க நிர்வாகி மினி வாசுதேவன், மாரிமுத்துவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விளக்கம் கேட்டார்,

அப்போது அவர் பிராணிகள் நல சங்க நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் மினி வாசுதேவன், கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் மாரிமுத்து மீது புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை துன்புறுத்தி, சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த மாரிமுத்துவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவினாசி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான அந்த நாயை மீட்ட பிராணிகள் நலச்சங்கத்தினர் அதனை தங்களது காப்பகத்தில் பராமரித்து வருகின்றனர் .

Tags:    

Similar News