தமிழ்நாட்டில் நாளை 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்
சென்னை:
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது 45 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் (1-ந் தேதி) 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டு இருந்தது.
இதற்காக தமிழநாட்டில் கோவின் தளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலி வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் 18 வயதை கடந்தவர்கள் மொத்தம் 3 கோடி 50 லட்சம் பேர் உள்ளனர்.
இதில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 1.50 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாக கொள்முதல் செய்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்க தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து வந்தது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு 1.50 கோடி தடுப்பூசிகளை உடனடியாக வழங்க இயலாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 7.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 2.50 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளையும் தமிழகத்திற்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதை வைத்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு திட்டமிட்டப்படி நாளை தடுப்பூசி போடலாமா? அல்லது வேறொரு நாளில் இந்த திட்டத்தை தொடங்கலாமா? என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
இது குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3.50 கோடி பேர் இருக்கும் சூழலில் 10 லட்சம் தடுப்பூசியை வைத்து திட்டத்தை தொடங்கினால் பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். அதை சமாளிப்பது மிகவும் கஷ்டம்.
இதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை வேறொரு நாளில் தொடங்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.