செய்திகள்

பாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா? பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்

Published On 2019-06-18 07:55 GMT   |   Update On 2019-06-18 07:55 GMT
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் என புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது.



உலக கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் இரவு பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள் பார்ட்டியில் ஈடுபட்டதே தோல்விக்கு காரணம் என சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது.

வைரலாகும் புகைப்படத்தில் பாகி்ஸ்தான் அணி வீரர்கள் நண்பர்களுடன் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் நான்கு வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இணையவாசிகள் இவற்றை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். 

இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தியதில் வீடியோவில் இருக்கும் சம்பவம் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்றது உறுதியாகி இருக்கிறது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையேயான கிரிக்கெட் போட்டி ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் போட்டி நடைபெற்றதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தை நெட்டிசன்கள் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றதாக கருதி வைரலாக்கி வருகின்றனர்.



கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 16) நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியிரை அந்நாட்டு கிரிக்கெட் பிரியர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். 

இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளரான முர்தசா அலி ஷா, ஷோயப் மாலிக் தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதே தோல்விக்கு முக்கிய காரணம் என தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டார். இதனை நூற்றுக்கும் அதிகமானோர் உடனடியாக பகிரத்துவங்கினர். 

வீடியோ மற்றும் புகைப்படம் வைரலானதும் அவை இரண்டு நாட்கள் பழையது என உறுதியாகி இருக்கிறது. இதனை தெரியப்படுத்தும் செய்திகளும் வெளியானது. இவற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் வீரர்கள் எந்த விதிமுறையையும் மீறவில்லை என தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தேதி முற்றிலும் பொய் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், அந்த அணியின் தோல்விக்கும் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த கொண்டாட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகி இருக்கிறது.

போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.
Tags:    

Similar News