செய்திகள்
பா.ஜ.க. மாணவர் அணி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்?
பா.ஜ.க. கட்சியின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யர்த்தி பரிஷத் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகியுள்ளது.
இந்தியா முழுக்க குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. கட்சியின் மாணவர் அமைப்பான பாரதிய வித்யர்த்தி பரிஷத் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படத்தில் உள்ள பதாகைகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை என எழுதப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான பதிவுகள் #ABVPAssam எனும் ஹேஷ்டேக்கில் பகிரப்படுகிறது. இவை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வைரலாகி இருக்கிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இதனை அகமதாபாத் மிரர் செய்தி நிறுவனத்தை சேர்ந்த அன்செலா ஜமிந்தர் எனும் புகைப்பட செய்தியாளர் எடுத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் பா.ஜ.க. மாணவர் அணியினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சபர்மதி ஆசிரமத்தில் திரண்ட போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
இது சார்ந்த செய்தி தொகுப்பு டிசம்பர் 19, 2019-இல் வெளியாகி இருக்கிறது. மேலும் வைரலாகும் புகைப்படத்தை தான் எடுத்ததாகவும், தற்சமயம் வைரலாகும் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது எனவும் ஜமிந்தர் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.