லைஃப்ஸ்டைல்
கோபம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

கோபம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

Published On 2021-10-21 03:41 GMT   |   Update On 2021-10-21 07:21 GMT
கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். இதேபோல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.
கோபம் ஒரு கொடிய அரக்கன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்மில் பலர் அதனை விட்டு விட முடியாமல் தவிப்பதும் உண்டு. கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள்.

முகம் கோணலாகி, கண்கள் சிவந்து நீர் வழிய, மூக்கு விரைக்க, நரம்பு வெளியே தெரிய நீங்களே விரும்பாத உங்கள் முகத்தை உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் சிந்தித்து இருக்கிறீர்களா?. ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால் கோபம் குறைகிறது.

கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபடலாம். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம். அதேபோல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும். இதனால் தான் நமது பெரியவர்கள் சொன்னார்கள். "குற்றம் பார்க்கின் சுற்றும் இல்லை" என்று? மாமியாரின் குத்தல் பேச்சுகளை மருமகள் மறந்தால் தான் வீட்டில் அமைதி நிலைக்கும்.

கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். இதேபோல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும். ஒருவர் மீதான கோபத்தை மற்றொருவர் மன்னிக்க கற்று கொள்ள வேண்டும். அப்போது அங்கு அன்பும், சமாதானமும், அமைதியும் நிலைக்கும்.
Tags:    

Similar News