செய்திகள்
பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் -சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவன் சிறுவன் என்பதால், அவன் தொடர்பான வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் 2013ல் மோடி பங்கேற்ற பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, 9 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, என்ஐஏ தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கூறும்போது, ‘குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் தொடர்பான வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஒருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நவம்பர் 1-ம் தேதி அறிவிக்கப்படும்’ என்றார்.