ஆன்மிகம்
சபரிமலையில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து 13-ந் தேதி புறப்படுகிறது

Published On 2020-01-04 05:08 GMT   |   Update On 2020-01-04 05:08 GMT
மகர விளக்கு பூஜையின் போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளம் கொட்டாரத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவி்ல் நடை கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டது. தினசரி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் 15-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள சந்தனத்திலான பெட்டகங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த திருவாபரணங்கள் ஆரன்முளா துணை கமிஷனர் தலைமை யில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் வருகிற 13-ந் தேதி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

இந்த ஊர்வலம் சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெரு வழி பாதையான எருமேலி, களைகட்டி, முக்குழி, கரிமலை வழியாக நடை பயணமாக 15-ந் தேதி மதியம் பம்பை சென்றடையும்.

அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். சன்னிதானத்தில், திருவாபரண பெட்டிகளுக்கு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.

அதை தொடர்ந்து, பதினெட்டாம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்,

தீபாராதனைக்குப்பின் பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார், பிரகாசமான ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

சபரிமலை ஐயப் பன் கோவிலில் நடைபெறும் முக்கிய மகர சங்கரம பூஜை 15-ந் தேதி அதிகாலை 2.50 மணிக்கு நடைபெறும்.

அப்போது திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன்மார்கள் புடைசூழ கொண்டு வரப்படும் நெய் மூலம் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

மகர விளக்கு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு, ஆபரண பெட்டிகள் எடுத்துவர வசதியாக, அன்றையதினம் பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை பம்பையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் மாலை 6.00 மணி முதல் 7 மணி வரை பதினெட்டாம் படி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும்.

மேலும் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பின் இரவு 7 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனு மதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகர விளக்கு பூஜை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்திற்கு பின் வாசு கூறியதாவது:-

15-ந் தேதி மகர விளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து 13-ந் தேதி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக புல்மேடு உட்பட ஜோதி தரிசனம் காணும் இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும். பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் கூடுதல் விளக்குகள் போடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வழக்கம்போல் பம்பை மலை முகடில் இருந்து பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்ய எல்லா வசதிகளும் செய்யப்படும்.

திருவாபரணங்கள் கொண்டுவரப்படும் வழிகளில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News