சீர்காழியில் கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக காய்ச்சல் அறிகுறி பரிசோதனை- அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீர்காழி வட்டத்தில் கொரோனா பரவலை தடுத்து கட்டுப்படுத்திட கோட்டாசியர் நாராயணன் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. காவல் துணை கண்காணிப்பாளர் யுவபிரியா, வட்டாசியர் சண்முகம், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி, வைத்தீஸ் வரன்கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் பங்கேற்று பேசுகையில், கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் உடல்வலி, காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்படும்.அப்போது நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள் அதனை சாதாரண காய்ச்சல் என நினைத்து மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதனால் கிருமி நுரையீரல் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தியதும் மூச்சுதிணறல் போன்ற அபாய கட்டம் ஏற்பட்டவுடன்தான் மருத்துவமனை செல்கின்றனர். காய்ச்சல் அறிகுறி இருந்தாலே பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர் பரிந்துரைப்படி நடந்திக்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் தொற்று பரவலை தடுக்க வீடு, வீடாக சுகாதார களபணியாளர்கள் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் குழந்தைகள் நல அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.