செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே கற்பழிப்பு வழக்கில் கைதான கார் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை
ஒட்டன்சத்திரம் அருகே கற்பழிப்பு வழக்கில் கைதான கார் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புலிக்குத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). கார் டிரைவர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு, தான் காதலித்த 22 வயது பெண்ணை ஆசை வார்த்தை கூறி கற்பழித்தார். இதில் கர்ப்பிணியான அந்த பெண்ணை, மணிகண்டன் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவானார். இதையடுத்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் மீது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.