செய்திகள்
காரைக்காலில் இருந்து சரக்கு வேனில் கடத்தி வந்த ரூ.1½ லட்சம் சாராய பாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
காரைக்காலில் இருந்து சரக்கு வேனில் கடத்தி வந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான சாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி மற்றும் போலீசார் பேரளம் அருகே பழையாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் 18 சாக்குமூட்டைகளில் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் சரக்கு வேனில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறைமாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கோடங்குடி பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன்(வயது40), மகேந்திரன்(37) ஆகியோர் என்பதும், அவர்கள் சரக்கு வேனில் காரைக்காலில் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்்புள்ள 2,700 சாராய பாட்டில்களை சாக்குமூட்டைகளில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகாந்தன், மகேந்திரன் ஆகியோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன், 2,700 சாராய பாட்டில்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.