செய்திகள்
கொரோனா பாதிப்பு- ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் காலமானார்
ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அஜித் சிங்கிற்கு கடந்த 20ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி:
ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் (வயது 82). அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதையடுத்து, கடந்த மாதம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20ம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஜெயந்த் சவுத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அஜித் சிங் மறைவையடுத்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.