செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் போலி மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

வேதாரண்யம் அருகே போலி மது தயாரிப்பு கூடம் கண்டுபிடிப்பு- ஒருவர் கைது

Published On 2021-02-20 17:28 GMT   |   Update On 2021-02-20 17:28 GMT
வேதாரண்யம் அருகே போலி மது தயாரிப்பு கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கார்-மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி, முதல்நிலை காவலர் பால்ராஜ் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பகுதியில் போலி மதுபானம் தயாரித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு 35 லிட்டர் கொண்ட 2 ஸ்பிரிட் கேன்களும், 703 போலி மது நிரப்பப்பட்ட பாட்டில்களும், ஏராளமான காலி பாட்டில்களும், மது நிரப்பி பாட்டில்களுக்கு மூடிபோடும் எந்திரமும், மதுபாட்டில்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சொகுசு கார் ஒன்றும் இருந்தது தெரிய வந்தது.

போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் தப்பியோடி விட்டனர். கார் டிரைவர் நெய்விளக்கு கீழக்காடு இளையராஜா(வயது 36) என்பவர் பிடிபட்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News