செய்திகள்
கைது

வேப்பனப்பள்ளி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

Published On 2021-05-04 10:38 GMT   |   Update On 2021-05-04 10:38 GMT
வேப்பனப்பள்ளி அருகே வாகன சோதனையில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், கஞ்சா கடத்தி செல்லப்படுவதாகவும் வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாலை வேப்பனப்பள்ளி அருகே கொத்த கிருஷ்ணப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் மூட்டை வைத்தவாறு ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரித்தனர். அதில் அவர் தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த ராஜப்பன் (வயது 40) என தெரியவந்தது.

மேலும் ராஜப்பன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவர் கொண்டு வந்த மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த மூட்டையில் சுமார் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜப்பனை கைது செய்த போலீசார் 30 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரனையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News