ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மாடவீதிகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஒத்திகை

Published On 2020-10-07 07:55 GMT   |   Update On 2020-10-07 07:55 GMT
நவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாடவீதிகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு பஞ்சாங்கத்தின் படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவம் கடந்த 19-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை பக்தர்கள் அனுமதி இல்லாமல், மாடவீதியில் சாமி ஊர்வலம் இல்லாமலும் நடந்து முடிந்தது.

2-வதாக நவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்தில் ஏழுமலையான் வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வருகிறார்.

அப்போது ரூ.300 கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்காக மாடவீதிகளில் சமூக இடைவெளியில் பக்தர்கள் நிற்பதற்காக 6 அடி இடைவெளியில் வட்டமிடப்பட்டுள்ளது.

அதில் பக்தர்களை எவ்வாறு நிற்க வைப்பது என்பது குறித்து தேவஸ்தான பணியாளர்களை நிறுத்தி அதிகாரிகள் ஒத்திகை செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் போது காலை 8 மணிமுதல் 10 மணி வரையும், இரவில் 7 மணிமுதல் 9 மணி வரையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

மாட வீதிகளில் பக்தர்கள் அனைவரும் அனுமதிப்பதற்கு முன்னதாக அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு ஏதாவது அறிகுறி தென்படும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை 20-ந்தேதி நடக்கிறது. 6-வது நாளான அக்டோபர் 21-ந்தேதி மாலை புஷ்ப பல்லக்கு, 23-ந்தேதி தங்க தேரோட்டம் வீதிஉலா நடக்கிறது. 24-ந்தேதி தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News