உலகம்
ஒமிக்ரான் வைரஸ்

டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் ஏற்படுத்தும் - புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2021-12-03 07:25 GMT   |   Update On 2021-12-03 07:25 GMT
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்தது.

ஜோகன்ஸ்பார்க்:

கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதன் பாதிப்பு குறைய தொடங்கிய போது கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. இதில் டெல்டா வகை உருமாறிய கொரோனா மற்றவைகளை விட அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. டெல்டா வகை வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்தது.

ஒமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த வைரஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படுமா? என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது.

ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்க கூடியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அந்த வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

தென்ஆப்பிரிக்க நாட்டின் சுகாதாரத்துறை ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக சேகரித்த தரவுகள் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில் டெல்டா அல்லது பீட்டா வைரசுகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27-ந்தேதியில் இருந்து 35 ஆயிரத்து 670 பேர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 90 நாட்கள் இடைவெளியில் அவர்கள் மீண்டும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா விஞ்ஞானி ஜூலியட் புல்லியம் கூறும்போது, “தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் எந்த அளவுக்கு தவிர்க்கிறது என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை” என்றார்.


மற்றொரு விஞ்ஞானியான அன்னேவான் கோட் பெர்க் கூறும்போது, “நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். தடுப்பூசிகள் எப்போதுமே தீவிர நோய், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு எதிராக தீவிரமாகவே போராடுகிறது” என்றார்.

இதையும் படியுங்கள்...அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றத்திற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

Tags:    

Similar News