உள்ளூர் செய்திகள்
வழிப்பறி கும்பலிடம் சிக்காமல் இருக்க வங்கி, ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் - போலீசார் அறிவுறுத்தல்
ஆங்காங்கே நிற்கும் கும்பல் தங்களுக்குள் தகவல்களை பரிமாறி கொண்டு திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
அவிநாசி:
அவிநாசி உள்ளிட்ட பல இடங்களில் அவ்வப்போது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த வாரம் வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் வசந்தகுமார் வங்கி ஏ.டி.எம்.,களில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வைத்தபடி சாவியை வாகனத்திலேயே விட்டு விட்டு அருகிலுள்ள ஒர்க்ஷாப்புக்கு சென்றுள்ளார்.
அவர் திரும்பி வருவதற்குள் ஒரு மர்ம நபர் பணத்தை திருடி சென்றார். இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ‘சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இருப்பினும் அந்த நபர் முக கவசம் அணிந்திருந்ததால் யார் என்பது தெரியவில்லை. இதுவரை அவர் பிடிபடவும் இல்லை.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தினமும் வங்கி மற்றும் ஏ.டி.எம்., சென்று பெரும் தொகையை எடுத்து செல்வோரை நோட்டமிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை திருடிச் செல்லும் கும்பல் பல இடங்களில் உள்ளது. இதுதான் அவர்களது தொழில்.
திருட்டு ஆசாமிகள் நோட்டமிடுவதோ, பின் தொடர்வதோ, பணத்தை பறிகொடுப்பவர்களுக்கு தெரியாது. அந்தளவு சாதுயர்மாக அந்த கும்பல் அவர்களை கண்காணிக்கும்.
அதேபோல் வங்கி ஏ.டி.எம்., மையங்களில் இருந்து பணம் எடுத்து செல்வோரை கண்காணிப்பது, அவர்களை பின்தொடர்வது, சரியான தருணம் பார்த்து அவர்களிடம் உள்ள பணத்தை திருடுவது போன்ற அனைத்து செயல்களிலும் ஒருவரே ஈடுபட மாட்டார்.
ஆங்காங்கே நிற்கும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறி கொண்டு இத்தகைய திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். மிகப்பெரிய ‘நெட்வொர்க்‘ வைத்து செயல்படுவதால் எளிதில் சிக்கமாட்டார்கள். எனவே வங்கி மற்றும் ஏ.டி.எம்., சென்று பணம் எடுப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.