ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நாளை நடக்கிறது

Published On 2021-03-27 07:04 GMT   |   Update On 2021-03-27 07:04 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

பின்னர் சித்திரை வீதிகளில் வலம்வந்து ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேர்ந்தார். இரவு 11.30 மணியளவில் தாயார் சன்னதியில் திருமஞ்சனம் கண்டருளினார்.

திருவிழாவின் 8-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து நம்பெருமாள் குதிரை வாகனத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு கோரதம் அருகே வையாளி கண்டருளுகிறார்.

திருவிழாவின் 9-ம்நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும், தாயாரும் ஒரு சேர காட்சி அளிப்பார்கள். இந்த காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தருவர்.

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தினத்தன்று நடைபெறும் இந்நிகழ்ச்சியையொட்டி நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைகிறார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேருகிறார். 12.30 மணியிலிருந்து 1.15 மணிவரை முதல் ஏகாந்தம் நடைபெறுகிறது.

பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2மணிக்கு வந்து சேருகிறார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைகிறார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 30-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News