செய்திகள்
பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் பெயர் பட்டியலை வைக்க வேண்டுகோள்
அடங்கலில் ஏற்றத்தாழ்வு உள்ளதாக கூறி ஏழை, எளிய விவசாயிகளுக்கு அரசு சலுகை கிடைக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பூர்:
அனைத்து கூட்டுறவு சங்கங்களும் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் பெயர் பட்டியலை வைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், அடங்கல் இல்லாமல் கடன் பெற்ற 30 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தள்ளுபடி சலுகை பெற்றுள்ளனர்.
ஆனால் அடங்கலில் குறைபாடு இருப்பதாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அடங்கலில் ஏற்றத்தாழ்வு உள்ளதாக கூறி ஏழை, எளிய விவசாயிகளுக்கு அரசு சலுகை கிடைக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி சான்று வழங்கிய நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த 4-ந்தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் அமைச்சர் சாமிநாதனிடம் முறையிட்ட போது அடங்கல் விவரங்களை கணக்கில் எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்திருந்தார்.
இருப்பினும் கூட்டுறவுத்துறையில், அடங்கலை காரணம் காட்டி தள்ளுபடி செய்யாமல் மறுக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள், பயிர்க்கணக்கு எடுக்க களத்துக்கு செல்வதே இல்லை. விவசாயிகள் கூறும் பயிருக்கு ஏற்ப அடங்கல் வழங்கி விடுகின்றனர்.
அடங்கலை காரணம் காட்டி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று மறுத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கி அனைத்து கூட்டுறவு சங்கங்களும் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் பெயர் பட்டியலை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.