ஆன்மிகம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2019-07-04 04:03 GMT   |   Update On 2019-07-04 04:03 GMT
ஆனி மாத அமாவாசையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காளம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காளம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதையடுத்து உற்சவ அங்காளம்மனுக்கு காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணிக்கு பம்பை மேளதாளம் முழங்க உற்சவ அம்மன் வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார்.

அதன் பிறகு அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் நள்ளிரவு 12.15 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதோடு, ஊஞ்சல் உற்சவம் நிறைவுபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி ஆனந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) ஜோதி, அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமே‌‌ஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர்கள் அன்பழகன், சுரே‌‌ஷ், சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜன் ஆகியோர் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News