செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் மேலும் ஒரு வழக்கில் கைது

Published On 2019-10-11 09:22 GMT   |   Update On 2019-10-11 09:22 GMT
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப்பை மேலும் ஒரு ஊழல் வழக்கில் தேசிய பொறுப்புடைமை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரிப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.

அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது உத்தரவிட்டது.

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது.

அதைத் தொடர்ந்து நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து லாகூர் நகரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், சவுத்ரி சர்க்கரை ஆலை கருப்புப் பண பரிமாற்றம் தொடர்பாக நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக மேலும் ஒரு ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சிறையில் உள்ள நவாஸ் ஷெரிப்பை  சவுத்ரி சர்க்கரை ஆலை வழக்கில் மீண்டும் தேசிய பொறுப்புடைமை அதிகாரிகள் கைது செய்தனர். லாகூர் நகரில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News