செய்திகள்
திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க.வில் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது

Published On 2021-11-20 10:00 GMT   |   Update On 2021-11-20 10:00 GMT
தமிழகத்தில் தற்போது 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த நிர்வாகம் 2016-ல் நிறைவடைந்தது.

அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஊரக பகுதிகளுக்கு தனியாகவும், நகர பகுதிகளுக்கு தனியாகவும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு முதலில் ஊரக பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

அப்போது பெரிதாக இருந்த சில மாவட்டங்கள் நிர்வாக நலனுக்காக பிரிக்கப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியவில்லை. மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த தேர்தலில் பெரும்பாலான ஊரக பஞ்சாயத்துகளில் தி.மு.க. வெற்றி பெற்று கைப்பற்றியது.

இதையடுத்து நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது.

இதற்கிடையில் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 561 பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தலை நடத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்களை மாநில தேர்தல் கமி‌ஷனர் பழனிகுமார் நடத்தினார்.

வாக்குசாவடி மையங்கள், வாக்கு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் போன்றவற்றை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் அவர் கலந்து ஆலோசித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பழனிகுமார் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தற்போது 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அரசியல் கட்சிகளும் ஆர்வமாக காத்திருக்கின்றன. எந்தெந்த வார்டுகளில் போட்டியிட தங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளன என்பதை கட்சி தொண்டர்கள் அலசி, ஆராய்ந்து வருகிறார்கள்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு இருப்பதால் அந்த வார்டுகளில் கட்சி நிர்வாகிகள் போட்டியிட முடியாத பட்சத்தில் தங்களது மனைவியை நிறுத்தவும் திட்டமிட்டு வருகிறார்கள். கட்சி தலைமையிடம் வார்டுகளை ஒதுக்குவதற்கு சிபாரிசு செய்து வருகிறார்கள்.

ஆளும் கட்சியான தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. அதேபோல எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் களத்தில் இறங்கி தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளது.

கூட்டணி கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று தி.மு.க., அ.தி.மு.க. தலைமையை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய தொடங்கிவிட்டன.

தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் இந்த பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனுக்கள் நாளை முதல் விநியோகிக்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்து அன்றே கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருசில மாவட்டங்களில் விருப்பமனு நேற்றுமுதல் பெறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் நாளையில் இருந்து விநியோகிக்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் வழங்கப்படுகிறது. நகர்மன்ற வேட்பு மனு கட்டணமாக ரூ.5000, பேரூராட்சிமன்ற உறுப்பினர் வேட்புமனு கட்டணமாக ரூ.2,500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் இக்கட்டணத்தில் பாதி செலுத்த வேண்டும், விண்ணப்பப் படிவ கட்டணம் ரூ.10 செலுத்தி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் மனுக்கள் 24-ந் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ம.தி.மு.க., பா.ஜனதா போன்ற கட்சிகள் விருப்ப மனுக்களை 24-ந் தேதி முதல் வழங்குவதாக அறிவித்துள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் முடிவுக்கேற்ப விருப்ப மனுக்கள் வெவ்வேறு தேதிகளில் விநியோகிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தேர்தல் அடுத்த மாத இறுதிக்குள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வருகிற வாரத்தில் தேர்தல் கால அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News