இரட்டை ஓட்டு விவகாரம் தொடர்பாக குமரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை- கலெக்டர் பேட்டி
நாகர்கோவில்:
குமரி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் அரவிந்த் நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் மொத்தம் 2,243 வாக்குச் சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 5.30மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. காலை 7மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விட்டது. அதேபோல் அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து வாக்காளர்களையும் முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத் தப்பட்டு உள்ளனர். அதன்படி அனைவரும் முகக்கவசம் அணிந்தே வருகின்றனர். முதலில் வாக்காளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது. பின்பு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது.
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் சில வாக்காளர்களுக்கு இரட்டை ஓட்டு இருக்கும் பிரச்சினை கேரளாவில் தான் பெரியஅளவில் வந்துள்ளது. நமது மாவட்டத்தில் பிரச்சினை எதுவும் வரவில்லை.
இந்த முறை கேரளா மற்றும் தமிழகத்தில் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதனால் ஒரு வாக்காளர் ஒரு இடத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும். அனைத்து இடத்திலும் லிங்க் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒரே நபர் இரு இடங்களில் வாக்களிப்பது என்பது நடக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.