செய்திகள்
அரியாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் கோர்ட்டு ஊழியர் படுகாயம்
அரியாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் கோர்ட்டு ஊழியர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
வில்லியனூர்-மணவெளி திருவேணி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது51). இவர் புதுவை கோர்ட்டில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் முருகையனை பின்னால் அமர வைத்துக்கொண்டு அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அரியாங்குப்பம் மாதாகோவில் வீதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் செல்வராஜுயும், அவரது நண்பர் முருகையனும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் செல்வராஜ் படுகாய மடைந்தார். முருகையன் காயமின்றி தப்பினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தற்போது செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.