செய்திகள்
வேலகவுண்டம்பட்டி அருகே மின்மோட்டார் திருடிய லாரி டிரைவர் கைது
வேலகவுண்டம்பட்டி அருகே மின்மோட்டார் திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அத்தியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே தண்ணீர் இரைப்பதற்காக கம்பரசர் மின்மோட்டார் வைத்திருந்தார். இந்த நிலையில் சதீஷ்குமார் வெளியூர் சென்றுவிட்டு கடந்த 15-ந் தேதி வீட்டிற்கு வந்தபோது கம்பரசர் மின் மோட்டார் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மின்மோட்டார் கிடைக்காததால் இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மின்மோட்டாரை திருடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு கடையில் கம்பரசர் மின் மோட்டாரை விற்பனை செய்வதற்காக ஒருவர் கொண்டு வந்தது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மின்மோட்டாரை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தத்தாதிரிபுரம் பப்புல் நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் லாரி டிரைவர் பொன்மணி (32) என்பதும், இவர் அத்தியப்பன்பாளையத்தில் சதீஷ்குமார் வீட்டில் கம்பரசர் மின் மோட்டார் திருடியதும் தெரியவந்தது. பின்னர் லாரி டிரைவர் பொன்மணியை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.