செய்திகள்
திண்டுக்கல் அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
திண்டுக்கல் அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அனீஸ் ரீகன் (வயது 18). அதே ஊரை சேர்ந்த செபஸ்தியார் மகன் ரினோ செல்வ பிரகாசம் (18). இருவரும் நண்பர்கள். நேற்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராமையன்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரினோ செல்வ பிரகாசம் ஓட்டினார். திண்டுக்கல்-தேனி சாலையில் குட்டியபட்டி பிரிவு அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், தாறுமாறாக ஓடி அந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அனீஸ் ரீகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ரினோ செல்வ பிரகாசம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். முன்னதாக விபத்து குறித்து தகவலறிந்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், அழகுபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான அனீஸ் ரீகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.