செய்திகள்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

Published On 2020-12-03 08:41 GMT   |   Update On 2020-12-03 08:41 GMT
பிரிட்டன் தடுப்பூசியை பெற விரும்பும் இந்திய பயணிகளுக்காக 3 இரவுகள் கொண்ட ஒரு டிராவல் பேக்கேஜை அறிமுகம் செய்ய ஒரு டிராவல் ஏஜென்சி திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரிட்டனில் பைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு என்பதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பெறுவதற்காக விமானத்தில் பிரிட்டன் செல்ல விரும்பும் இந்தியர்கள் பலர், டிராவல் ஏஜெண்டுகளிடம் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். எப்போது பிரிட்டன் செல்ல எங்களுக்கு விமான டிக்கெட் கிடைக்கும்? என பெரும்பாலான பயணிகள் கேட்கின்றனர். எனவே, வரும் நாட்களில் பிரிட்டன் செல்வதற்கு ஆர்வம் காட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் தடுப்பூசியை பெற விரும்பும் இந்திய பயணிகளுக்காக 3 இரவுகள் கொண்ட ஒரு டிராவல் பேக்கேஜை அறிமுகம் செய்வதற்கு ஒரு டிராவல் ஏஜென்ட் திட்டமிட்டுள்ளது.

இது லண்டன் பயணத்திற்கு உகந்த காலம் இல்லை என்றபோதிலும், பிரிட்டன் விசா பெற்றுள்ள சில இந்தியர்கள் அங்கு செல்வது தொடர்பாக தங்களிடம் விசாரித்ததாக ஈசிமைடிரிப் டாட் காம் நிறுவனர் நிஷாந்த் பிட்டி தெரிவித்தார். 

‘தடுப்பூசி போட விரும்பும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தப்படுத்தல் தேவையா? இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அங்கு தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களா, இல்லையா? என்பது குறித்து பிரிட்டன் அரசாங்கத்திடமிருந்து தெளிவான விளக்கத்திற்காக எங்கள் நிறுவனம் காத்திருக்கிறது. 

தடுப்பூசி போடுவதற்காக மட்டும் பிரிட்டன் செல்ல ஆர்வமுள்ளவர்களுக்கு மூன்று இரவுகள் கொண்ட ஒரு டிராவல் பேக்கேஜை அறிமுகப்படுத்த எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

நிலையான இருக்கை கட்டணத்தை வழங்க ஒரு விமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். ஏற்கனவே லண்டனில் உள்ள  ஓட்டல்களுடன் ஒப்பந்தங்கள் உள்ளன. மருந்து செலுத்துவதற்காக ஒரு மருத்துவமனையுடன் சில ஒப்பந்தம் செய்ய  திட்டமிட்டுள்ளோம்’ என்றும் நிஷாந்த் பிட்டி தெரிவித்தார்.

இதுபற்றி மும்பையைச் சேர்ந்த ஒரு டிராவல் ஏஜென்ட் கூறியதாவது:-

கொரோனா தடுப்புசியை பெற பிரிட்டனுக்கு எப்படி, எப்போது செல்ல முடியும்? என நேற்றே சிலர் கேள்விகளை எழுப்பினர். பிரிட்டனில் இந்தியர்கள் தடுப்பூசி பெற முடியுமா என்பது பற்றி விசாரித்து விரைவில் சொல்வதாக அவர்களிடம் கூறினேன். 

எப்படியிருந்தாலும், பிரிட்டனில் தடுப்பூசி பெறுவதற்கான வரிசையில் முதலில் இருப்பது, கொரோனா வைரசால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ள முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்தான். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News