செய்திகள்
பொன்னை ஆறு

90 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2021-11-20 10:28 GMT   |   Update On 2021-11-20 10:28 GMT
பொன்னை ஆற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொன்னை, மேல்பாடி தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை:

ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணையில் இருந்தும் மற்றும் கிளை ஆறுகளில் இருந்தும் சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் பொன்னை ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் பெய்து வருகிறது. இதனால் பொன்னை ஆற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு மிக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பொன்னை அருகே ஆற்றில் வெள்ளம் செல்வதை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பொன்னை ஆற்றை ஆய்வு செய்தார்.

பொன்னை ஆற்றிலிருந்து 60 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் நேற்று அதிகாலை சுமார் 1 மணி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொன்னை ஆற்றின் கரையோரம் 100 நபர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கால்நடைகளும் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக, நேற்று அதிகாலை பொன்னை அருகே உள்ள பொன்னையாற்றின் தரைப்பாலத்தின் மீது சுமார் 2 அடி உயர அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் பொன்னை போலீசார் பாலத்தின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் இத்தரை பாலத்தின் 5-வது கண்ணுக்கு அருகில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது..

மேலும் மேல்பாடி அருகே உள்ள பொன்னையாற்று பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை கடக்க உதவும் மேல்பாடி தரைப்பாலத்தின் மீதும் பாலமே தெரியாத அளவில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பாலத்திலும் வெள்ளப் பெருக்கு காரணமாக, உடைப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னை அருகே இரும்புக் கூரை போட்ட பழைய இரும்பு கடை சாய்ந்து விழுந்தது. இதேபோல் பொன்னை- லாலாபேட்டை சாலையில், கீரைசாத்து அருகே சென்ற ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அமைச்சர் துரைமுருகன் நேற்று திருவலம் அருகே பொன்னை ஆற்றில் வெள்ளம் செல்வதை நேரில் ஆய்வு செய்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News