செய்திகள்
பிரதமர் மோடி

பெட்ரோல் விலை உயர்வு... பிரதமர் மோடியை வாழ்த்திய மத்திய பிரதேச மந்திரி

Published On 2021-02-19 05:55 GMT   |   Update On 2021-02-19 05:55 GMT
பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும் பிரதமர் மோடிக்கு மத்திய பிரதேச மந்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போபால்:

நாடு முழுவதும் பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். 

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய பிரதேச மாநில மருத்துவக்கல்வித் துறை மந்திரி விஷ்வாஸ் சரங் மற்றொரு கோணத்தில் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி உள்ளார்.

‘சூரிய சக்தியை போக்குவரத்து வாகனங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்த பிரதமர் ஏற்பாடுகளை செய்திருக்கிறார். மின்சார வாகனங்களைக் கொண்டுவருவது தொடர்பான மோடியின் முடிவு, எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க உதவும். 

தேவை மற்றும் விநியோகம் ஆகியவை உலக சந்தையில் விலைகளை தீர்மானிக்கிறது. எனவே, தேவையை குறைத்தால் விலைகளின் மீது கட்டுப்பாடு இருக்கும். இதனால்தான் பிரதமர் மோடி மின்சார வாகனங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளார். எண்ணெய் விலையை நம்மால் கட்டுப்படுத்த முடியும்’ என மந்திரி விஷ்வாஸ் சரங் தெரிவித்தார்.

அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் மாநில வரியை குறைத்து அதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய பிரதேசத்தில் வரி குறைப்பு தொடர்பாக எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்ப உள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் ஆகிய பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News