திருமங்கலத்தில் டாஸ்மாக் கடை கதவை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் எதிரே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மதுபானக்கடை அருகே உள்ள பேக்கரியில் தண்ணீர் மோட்டார் போடுவதற்காக பின்பக்கம் சென்றபோது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கடை பணியாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து பணியாளர்கள் வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறக்க முற்பட்ட போது திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மதுபான கடை ஷட்டரும் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பணப்பெட்டியில் பணம் வைக்காமல் மதுபான பாட்டில்களுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளை போகவில்லை. மேலும் மதுபான பாட்டில்கள் கணக்கு எடுத்த பின்பே மது பாட்டில்கள் கொள்ளைபோனது தெரிய வரும் என கடை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் முன்பக்க கதவு துணியால் கட்டப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் கொள்ளை சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் ஆய்வாளர் மாய ராஜலட்சுமி, உதவி சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.