செய்திகள்
கோப்புபடம்

சீர்காழி அருகே உடல் கருகிய நிலையில் தூக்கில் மீனவர் பிணம் - போலீசார் விசாரணை

Published On 2021-10-14 13:06 GMT   |   Update On 2021-10-14 13:06 GMT
சீர்காழி அருகே உடல் கருகிய நிலையில் தூக்கில் மீனவர் பிணமாக தொங்கினார். அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீனவர் காலனி தோட்டாலம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் குணா (வயது23). மீனவரான இவர் நேற்று முன்தினம் திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவர் கடற்கரையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

இந்தநிலையில் நேற்று காலை திருமுல்லைவாசல் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ஒரு தனியார் மீன் கம்பெனி வளாகத்தில் உடல் எரிந்த நிலையில் தூக்கில் குணா பிணமாக தொங்கினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குணாவின் தந்தை ரவி சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணா எப்படி இறந்தார்? அவரை யாராவது எரித்துக்கொன்று தூக்கில் உடலை தொங்க விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் கருகிய நிலையில் தூக்கில் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திருமுல்லைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News