ஆன்மிகம்
1,008 சங்குகள் சிவலிங்க வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

Published On 2021-11-23 05:57 GMT   |   Update On 2021-11-23 05:57 GMT
கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை சோம வாரம் (திங்கட்கிழமை) சிவனுக்கு உகந்த நாளாகும். சோம வாரத்தில் சிவனுக்கு சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து, அதனை அபிஷேகம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

காசிக்கு இணையான தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 1,008 சங்குகள் கொண்டு அபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தலவரலாறு கூறுகிறது. நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி இக்கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சிவலிங்க வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதில் புனித நீர் நிரப்பப்பட்டு, யாக பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து சாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ரவி, நாடி நிபுணர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கழிவறை, குளியலறை ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.
Tags:    

Similar News