திருவோணம் அருகே கூடுதல் பஸ்கள் இயக்கக் கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
திருவோணம்:
கரம்பக்குடியிலிருந்து தினந்தோறும் திருவோணம், வெட்டிக்காடு வழியாக ஒரத்தநாடு கல்லூரி, பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் மற்றும் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் பொதுமக்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என ஏகப்பட்ட பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சென்று வீடு திரும்புகின்றனர்.
சமீபகாலமாக பேருந்துகளில் முழுவதும் பயணிகள் கூட்டம் திருவோணம் பகுதியிலேயே அதிகமாகி விடுவதால் வெட்டிக்காடு, கக்கரக்கோட்டை, நெடுவாக் கோட்டை உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிடுவதாக கூறி எங்களுக்கு கூடுதல் பேருந்துகள் காலையும் மாலையும் கல்லூரி, பள்ளி, பணிக்கு செல்லும் வேளையில் இயக்க வேண்டும் என மாணவ மாணவிகள் ஒரத்தநாடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.