செய்திகள்
கூடுதல் தடுப்பூசிகளை வழங்க கோரி மார்க்சிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசி அளவை வெளிப்படையாக தினமும் எந்தெந்த மையங்களில் எவ்வளவு பேருக்கு செலுத்தப்படுகிறது என்பதை சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் ஊடகங்கள் மூலம் அனைவருக்கும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழுக்கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் தலைமையில் இணைய வழியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச்செயலாளர் முத்துக்கண்ணன் உள்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்கு தேவையான மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை அதிகப்படுத்தி கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும், ஒன்றிய மோடி அரசு தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை கூடுதலாக வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள் அதிகமுள்ள திருப்பூர் மாவட்டத்தில் வாரம் குறைந்தபட்சம் தலா 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசி அளவை வெளிப்படையாக தினமும் எந்தெந்த மையங்களில் எவ்வளவு பேருக்கு செலுத்தப்படுகிறது என்பதை சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் ஊடகங்கள் மூலம் அனைவருக்கும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
இப்பணிகள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் சிறப்பு கண்காணிப்பு அலுவலரை மாவட்ட நிர்வாகம் நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 10-ந்தேதி (வியாழக்கிழமை) மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தனிநபர் இடைவெளியுடன் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.