செய்திகள்
120 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் மேட்டூர் அணையின் அழகிய தோற்றம்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 45 ஆயிரம் கன அடியாக குறைப்பு

Published On 2021-11-22 04:01 GMT   |   Update On 2021-11-22 04:01 GMT
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் கடந்த 14-ந் தேதி முதல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 45 ஆயிரம் கன அடி மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி என அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் செல்வதால் நடைபாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து இன்று காலை 45 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் கடந்த 14-ந் தேதி முதல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

இன்று காலையும் மேட்டூர் அணைக்கு வரும் 45 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் குளிக்கவும், அருகில் செல்லவும் தடை நீடிக்கிறது. மேட்டூர் அணை கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக் கிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News