செய்திகள்
எச்ஏஎல் நிறுவனம்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஊழியர் கைது

Published On 2020-10-09 10:42 GMT   |   Update On 2020-10-09 10:42 GMT
இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஊழியர் நாசிக் பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: 

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஊழியர் நாசிக் பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-க்கு ரகசிய தகவல்களை வழங்கியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஊழியர் இந்திய போர் விமானங்கள் மற்றும் அவற்றின் உற்பத்தி பிரிவு பற்றிய தகவல்களை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவர் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் முகவர்களுக்கு இரகசிய தகவல்களை வழங்குவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எச்ஏஎல் மற்றும் நாசிக்கின் ஓசாரில் உள்ள அதன் விமான உற்பத்தி பிரிவு பற்றிய முக்கியமான விவரங்கள் தொடர்பான தகவல்கள், விமான நிலையம் மற்றும் உற்பத்தி பிரிவுக்குள் தடைசெய்யப்பட்ட பகுதிகள் பற்றிய தகவல்களையும் பாகிஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார்.

அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், 1923 இன் 3, 4 மற்றும் 5 பிரிவுகளின் கீழ் பயங்கரவாத தடுப்புப் படை வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரிடமிருந்து ஐந்து சிம் கார்டுகள் மற்றும் இரண்டு மெமரி கார்டுகளுடன் மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 10 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
Tags:    

Similar News