செய்திகள்
யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல: மந்திரி அனில் தேஷ்முக்
கொரோனா விதிமுறை மீறல் தொடர்பாக நடிகர்கள் அர்பாஸ் கான், சோகைல் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் அல்ல என்று உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
மும்பை :
இந்தி நடிகர் அர்பாஸ் கான், அவரது சகோதரர் சோகைல் கான் மற்றும் சோகைல் கானின் மகன் நிவாஸ் கான் ஆகிய 3 பேரும் சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பினர்.
தற்போது பல நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருவதை கருத்தில் கொண்டு 3 பேரையும் மும்பை பாந்திராவில் உள்ள ஓட்டலில் ஒருவாரம் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் விதிமுறைகளை மீறி 3 பேரும் ஓட்டலை காலி செய்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து மாநகராட்சி அளித்த புகாரின்பேரில் பாந்திரா போலீசார் 3 பேர் மீதும் அரசு அதிகாரிகள் உத்தரவுக்கு கீழ்படியாமை, நோய் தொற்று பரவும் வகையில் அலட்சியமாக செயல்படுதல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி நேற்று உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
தற்போதைய தொற்று பரவல் காலத்தில் சிறந்த குடிமகன்கள் சட்டத்தை மதித்து நடப்பது அவர்களது கடமை. சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் அல்ல. அரசின் விதிமுறைகளை அனைத்து மக்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.