செய்திகள்

சித்தூர் அருகே 6 மாத ஆண் குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்

Published On 2019-03-15 11:14 GMT   |   Update On 2019-03-15 11:14 GMT
சித்தூர் அருகே கணவர் பாசம் வைக்கவில்லை எனக்கருதி 6 மாத ஆண் குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் பில்லிக்குண்டலப்பள்ளியைச் சேர்ந்தவர் வினோத்குமார், விவசாயி. இவருடைய மனைவி புவனேஸ்வரி. பிப்ரவரி மாதம் 26-ந்தேதி இவர்களுடைய 6 மாத ஆண் குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு, அன்று கணவன்-மனைவி இருவரும் விவசாயப் பணிகளுக்காக வயலுக்குச் சென்றுள்ளனர்.

திரும்பி வந்து பார்த்தபோது, குடிசை வீட்டில் தூங்க வைத்திருந்த ஆண் குழந்தை நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் பிணமாக கிடந்தது. தாங்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் யாரோ குடிசை வீட்டுக்குள் நுழைந்து, தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தையைக் கொன்று நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் பிணத்தை வீசி விட்டுச் சென்று விட்டதாக கூறினர். இதுபற்றி ஸ்ரீரங்கராஜபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகனை, பெற்ற தாயே கொலை செய்தது தெரிய வந்தது.

பில்லிக்குண்டலப்பள்ளியைச் சேர்ந்த நாகராஜ்-ராஜம்மா தம்பதியரின் மகள் புவனேஸ்வரி. இவர், எகுவமெதவாடா கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை காதலித்தார். திருமணத்துக்கு முன் இருவரும், ஒருநாள் திடீரென வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். மகளை காணவில்லை என, புவனேஸ்வரியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, வினோத்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர், புவனேஸ்வரியை பொதட்டூர்பேட்டையில் வைத்து, திருமணம் செய்து கொண்டு எகுவமெதவாடா கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு தலைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் வீட்டை மறந்திருந்த அவர், தனக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்ததும், பெற்றோர் வீட்டுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.

புவனேஸ்வரி 2-வதாக கர்ப்பிணியானார். அவருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மூத்த மகன் மீது அதிகம் பாசம் வைத்திருந்த வினோத்குமார், இளைய மகன் மற்றும் புவனேஸ்வரி மீது அவ்வளவாக பாசம் வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கணவர், தன்னையும் இளைய மகனையும் சரியாக கவனிக்கவில்லை, பாசம் வைக்கவில்லை எனக் கருதிய புவனேஸ்வரி கடும் மனவேதனையில் இருந்து வந்தார். கணவரின் மனதை மாற்ற முயன்றும், அவரின் முயற்சி பலன் அளிக்கவில்லை. வினோத்குமாரின் போக்கிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

6 மாதமேயான இளைய மகனை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என அவர் முடிவெடுத்தார். அதன்படி பிப்ரவரி மாதம் 26-ந்தேதி குடும்பத்தினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தனது இளைய மகனை நீர்நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் மூழ்கடித்துக் கொலை செய்தார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி டிரம்மை மூடி விட்டு வயலுக்குச் சென்று விட்டதாக கபட நாடகம் ஆடிய விவரம் தெரிய வந்தது. இதையடுத்து புவனேஸ்வரியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News